Tuesday, May 5, 2026

ஏற்பது இகழ்ச்சி…??.!.!

 

​அவள் யாரும் பார்க்காதவற்றை எல்லாம்

கண்டு கொள்கிறாள் – இருப்பினும்

எல்லோரும் சுலபமாகக் காண்பதை

இலகுவாகத் தவற விடுகிறாள்.

இப்படித்தான்

3டி காட்சியின் சித்திரங்களென

வாழ்வின் திரையில்

துருத்தி நிற்கும் உண்மைகளை

புறங்கையால் விலக்கி ஒதுக்குகிறாள்.

புரைதீர்ந்த நன்மை பயக்குமெனினும்

எத்தனை பொய்களை ஏற்கலாம்….?

வளர்ந்த தன் குஞ்சுகளில்

வால் நீண்டது குயிலினுடையதெனப் புரிந்ததும்

கூட்டிலிருந்து துரத்தி விடும்

காகங்களுக்கு மத்தியில்

தான் அடைகாத்துப் பொறித்தவற்றுள்

சுளகு போன்ற அலகு கொண்ட

வாத்துக் குஞ்சை – எவ்வித மறுப்புமின்றிச்

செட்டைகளுக்குள் அரவணைக்கிறது

அந்த வெகுளியான தாய்க்கோழி.

No comments:

Post a Comment