சேவற்சண்டை களத்தில்
உதிர்ந்து பறக்கும் இறகுகளின்
எண்ணற்ற ரோம இழைகளென
வாழ்வின் நாட்கள் தொலைந்து
மறைகின்றன – எந்தப் பயனுமின்றி.
கிளைகள் மீதே வெடித்து மணக்கும்
நாகலிங்க மலர்கள்
வாடி வெளுத்த கண்களெனத்
தரையில் வீழ்ந்திருப்பது போல்
ஆசைகளும் கனவுகளும் அடங்கும்
சில போகித்தும் சில மறந்தும்.
இப்பிறப்பின் வழுக்கும் விளிம்புகளைத்
தாண்டுவது எவ்வாறு காலாதீதா…?!
அறியப்பட வேண்டிய ஒற்றைப் பொருளைக்
கண்டடையப் போதுமோ
எஞ்சியிருக்கும் சொற்ப ஆயுள்…!!
காலனைக் காலால் உதைக்க இயலாதவர்கள்
வேண்டுவது எல்லையற்ற காலம் தானே..!
பைரவா…..!
நின் திருப்தியுற்ற நாயின் வாயிலிருந்து
கூரியப் பற்களிடை வழிந்து
நிலத்தில் உருண்டு நிற்கும் குருதித்துளியென
என் வெளியெங்கும்
உறைந்து போய் நிற்கட்டும் இந்தக் காலமும்.
No comments:
Post a Comment