ஒரு கசந்த கோப்பை பானமென
பருகுகிறேன் இந்த நெடிய இரவை
துளியாக துளித் துளியாக
வைக்கப்பட்ட ஒரு நம்பிக்கையின் இழப்பு
ஒரு பசிய துரோகத்தின் வலி
எல்லாவற்றயும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது
வாழ்வின் சமன்பாடுகளை
பின்னிரவின் அமைதியை
எல்லாவற்றையும். . .
மழையில் நனைந்த ஈசலிறகுகள்
சிறிதே அசைந்து இடம் மாறுகின்றன
தனித்தெரியும் தெரு விளக்கின்
மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில்
சாம்பலென புலரும் வைகறையிலும்
இன்னும் மீதமிருக்கிறது
நாவின் சுவை அரும்புகளில்
விழுங்கவே முடியாததொரு கசப்பு
No comments:
Post a Comment