உப்பு கரிக்கத் துவங்கிய தேநீருடன்
நான் அமர்ந்திருந்த அந்த முன்னிரவில் தான்
எனைத் தேடி வந்திருந்தாய் நீ
வேட்டையாடப்பட்ட ஒரு சிறு மிருகத்தின்
நிராதரவான உறைந்த கண்களுடன்
கொடிய புறக்கணிப்பின் இரணம் - உன்
உடலெங்கும் தகித்துக் கொண்டிருந்தது
என் தேநீர்க் குவளையை நான்
உன்னிடமிருந்து மறைக்க விரும்பினேன்
என் சமையலறைக் குழாயினின்று
சொட்டிக் கொண்டிருந்த நீரின் - ஒரு
துளியளவு கருணையே வேண்டியிருந்தது
இந்த உலகிடமிருந்து உனக்கு
நீயறியாமல் இரகசியமாய் என் உடலின்
அத்தனை வடுக்களையும் தடவிக் கொண்டேன்
உன் நம்பிக்கைகளை அதற்குப் பின்னும்
நான் சிதைக்க விரும்பவில்லை
துரோகத்தின் நீண்ட நிழல்கள்
துரத்தும் பகல்களைக் கடந்தே
இந்த நிழல்களற்ற மாலையை
அடைய முடிந்தது என்றாய்
மறுநாளில் திரும்பப் போகும்
என்னைத் தொடரும் நிழல்களை
நீ அறியும் முன் உன்னை
வெளியேற்றி விடுவதென தீர்மானித்தேன்
பிரார்த்திக்க ஒரு கடவுளின் சித்திரம்
வேண்டுமென நீ நிர்பந்தித்த போது
என் எல்லா கடவுளர் படங்களின்
சாம்பல் நிறைந்த கலயத்தை நிலவறையினின்று
தூசு துடைத்துக் காட்டவே வேண்டியிருந்தது
உன்னுடைய சந்தேகங்கள் அப்போது
தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும்
வெளியே உரக்க வீசத் துவங்கியிருந்த
மழைக் காற்றின் ஓலத்தில் வேறெதையுமே
கேட்க முடியவில்லையென நான்
பாவிக்கத் துவங்கியது அதற்கப்புறம் தான்
No comments:
Post a Comment