Monday, May 4, 2026

மறு பதிப்பு

சுழித்தோடும் இந்த நதியை

பார்த்தாயா அன்பே

ஏதேன் தோட்டத்தின்

ஏதோவொரு பழுப்பு இலையை

சுமந்து கொண்டே நகர்கிறது

யுகம் யுகமாய்


விழுதுகள் போல் வேர்கள் இறங்கும்

மலைச்சரிவில் பயணிப்பவன்

நைந்த உடலில் போர்த்திய

கம்பளி - தலைமுறைகளுக்கு

முந்தைய ரோமம்


தன் முதல் இரையை

கொன்றிருக்கும் அந்த

பாலை நில மாமிசப்பட்சிணிக்கு

முன்பே பழகியிருக்கும்

வேட்டையின் உதிர சுவை


பருவத்தின் முதல் மழை பெய்த

அழுத்தமான இரவை

தொடரும் மதர்ப்பான புலரியில்

இலைகளில் தங்கிய ஈரமென

சொட்டிக் கொண்டிருக்கிறது

ஆதி காமம்


No comments:

Post a Comment