Monday, May 4, 2026

உயிர்த்தெழுதல்

திருப்பாமல் எப்படி நிறுத்துவதென தெரியவில்லை

வார்த்தைகள் வனாந்தரத்தில் அலையும் பக்கங்களை

உன் அகத்தின் காயங்களை

பெருமூச்சுகளின் தகிப்புகளை

இரகசியமான விம்மல்களை

சுயஇன்பம் முடிவுறும் காழ்ப்புணர்ச்சிகளை

உன் நாட்குறிப்புக்கு மறுக்கப்பட்ட திறப்புகளைக்

கண்டு கொள்ளாதது போல் கடந்து 

செல்வது எவ்வாறென விளங்கவில்லை

இவ்வளவு இலகுவானதா உன் இதயம்

ஒரு சின்னஞ்சிறு சொல் உன்னை 

இறுதி வரை அழுத்தியிருந்ததா

ஏதொவொரு காலையில் எழுப்பிய குறுஞ்செய்தி

ஒவ்வொரு விடியலிலும் படிக்கப்பட்டதா

இலக்குகள் தொலைத்த உன் பார்வைகள்

எந்தன் திசைகளைத் தேடியா இருந்தன

காகிதங்களின் நிலத்திலிருந்து எழுந்து வரும்

முற்றிலும் இப்புதிய மனிதனை சந்திக்காமல்

புறக்கணிப்பது இன்னும் கைகூடவில்லை

உன் சவப்பெட்டியை இறக்கிய குழிக்குள்

என் குற்றவுணர்ச்சிகளையும் புதைத்து விட்டு

படிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்

உன்னைப் பற்றிய உன் கவிதைகளை


No comments:

Post a Comment