Monday, May 4, 2026

உடலோடு கிளத்தல்


​• கண்மண் தெரியாமல்

இப்பாலை நிலத்தில்

வெகு தூரம்

ஓடி வந்து விட்டேன் நண்பா!

ஈர வாசம் பிடித்துக் கொண்டு

இந்தக் கிணற்றடிக்கு வந்தால்

என்னிரு விழிகளும்

நீர்ப்பரப்பில் மிதந்தபடி

வெறித்துப் பார்க்கின்றன என்னை.

• உயிரெல்லாம் வேண்டாம்

களைத்துறங்கும் – என்

உள்ளங்கால்களை

இரவு முழுதும் அழுத்தி விட

உன் பத்து விரல்களை மட்டும்

படுக்கையினோரம்

வைத்து விட்டுப் போ.

• அக்குள் பிளந்து

வியர்வை வாசக் காற்றில்

தலைவிரித்தாடும் காடொன்று

என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது.

எவர் தோளில்

தலை வைத்துப் படுத்தேன்

என்று தான் நினைவில்லை.

• இந்தச் சுருட்டு பிடிக்கும் கலையை

நீ – இன்னும் கொஞ்சம்

முறையாகக் கற்றுத் தேற வேண்டும் தோழீ.

மூச்சை இழுத்து வெளிவிடுகையில்

உன் முலைக்காம்புகள் வழியே

புகை வளையம் வளையமாய்

வெளியே கசிகிறது பார்..!

No comments:

Post a Comment